சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி |
முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
Songs from 504.0 to 646.0 ( திருவில்லிபுத்தூர் )
Pages:
1
2
3
4
5
6
7
8
Next
தை ஒரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே
[504.0]
கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும்
சீலத்தனள் | தென்திருமல்லிநாடி | செழுங்குழல்மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய
சோலைக்கிளி | அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.
[504.1]
மல்லிநாடாண்டமடமயில் - மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள் | தென்புதுவை
வேயர்பயந்த விளக்கு.
[504.2]
வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர்
இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே
[505.0]
Back to Top
மத்த நன் நறுமலர் முருக்க மலர்
கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித்
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து
வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே
[506.0]
சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
[507.0]
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
[508.0]
உருவு உடையார் இளையார்கள் நல்லார்
ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்
திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்
[509.0]
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும்
தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே
[510.0]
Back to Top
மாசு உடை உடம்பொடு தலை உலறி
வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய்
[511.0]
தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்
தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து
ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே
[512.0]
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
[513.0]
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்
குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே
[514.0]
இன்று முற்றும் முதுகு நோவ
இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை
மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக்
கம் எழாதது எம் பாவமே
[515.0]
Back to Top
குண்டு நீர் உறை கோளரீ மத
யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக்
கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்
கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக்கடற் பள்ளியாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே
[516.0]
பெய்யு மா முகில்போல் வண்ணா உன்தன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம்
மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே
[517.0]
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
அழித்தி யாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
முகத்தன கண்கள் அல்லவே
[518.0]
முற்று இலாத பிள்ளைகளோம் முலை
போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது
உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
சேவகா எம்மை வாதியேல்
[519.0]
பேதம் நன்கு அறிவார்களோடு இவை
பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக
ளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மண
வாட்டிமாரொடு சூளறும்
சேது-பந்தம் திருத்தினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே
[520.0]
Back to Top
வட்ட வாய்ச் சிறுதூதையோடு
சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
அறிதியே கடல்வண்ணனே
[521.0]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Sun, 24 Mar 2024 01:35:54 -0400
send corrections and suggestions to admin @ sivaya.org
divya prabandham song